Monday, November 29, 2010

வியர்வைப்பூ பூத்த மதியம்…

விடுமுறை நாட்களை விட பள்ளி நாட்களின் மதியங்கள் ரசமானவை.


பள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று. உணவு இடைவேளையில் உணவுண்ணும் காலம் குறைவானதே. குறைவானது உணவுண்ணும் காலம், நிறைவானது உணவின் சுவை.


அபூர்வமாய் வரும் கறி சோற்றுடனோ, கோழி குழம்புடனோ தவறாது உடன் இருக்கும் சில "கரி"த்துண்டுகள்‍‍, வரும் வழியில் பேயோ, பிசாசோ உணவை திருடி தின்பதை தடுத்த அசதியில். தயிர் சோறா, பழைய சோறா யார் கண்டது வேற்றுமையை. ஆளுக்கு ஒரு கை.


தூக்குவாளியை கழுவுகிறேன், தட்டை கழுவுகிறேன் என்று பள்ளிக்கூட குழாயிலோ, அருகில் இருக்கும் கை பம்பிலோ, கிணற்றடியிலோ தண்ணீரில் ஆடிய ஆட்டத்தின் நினைவுகள் இன்றும் ஈரமானவை. "டேய், கொண்டாடா உனக்கு ஒழுங்காவே கழுவ தெரியாது. நான் தான் கழுவி தருவேன்", என்று தட்டை வெடுக்கென்று பிடுங்கும் வசந்தியும், "டேய், ப்ளீஸ்டா. எனக்கான்டி தண்ணி அடிச்சிக்கொடுடா", என புன்னகைத்து கெஞ்சும் ப்ரீயாவும் கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்க "நா எறிபந்தாட போறேன். பொண்ணுங்கயெல்லாம் அதுக்கு சேத்தி யில்ல" என்ற வாக்கியமே இன்று வரை நினைவிற்கு வரும் முதல் ஆணாதிக்க வெளிப்பாடு.
 ‌
கிட்டிப்புல், கோலி போன்ற ஆட்டங்களும், வாத்தியார்களின் கழுகு கண்களுக்கு தப்பி அவ்வப்போது அரங்கேறும். இப்பமே ஒரு வீட்டுப்பாடத்த எழுதி முடிச்சா, போற வழியில இன்னும் ரொம்ப நேரம் ஆலஊஞ்சல் ஆடலாமே என்ற திட்டங்களும் ஒரு மனதாக நிறைவேறும்.






உணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்க‌, வகுப்பின் உள் நுழைய ஆசிரியரோடு இடும் போட்டி பரம்பரைகள் கடந்தும் தொடரும் சம்பிரதாயம். அவசரமாய் இடம் தேடி அமர்ந்து புத்தகம் விரிக்கையில், ஜன்னல் வழி வரும் வேப்பமர தென்றல் காற்று, வேர்வைப்பூமாலை துடைத்து, ஆசுவாசப்படுத்தி, இதம் அளிக்கும்; சமயத்தில் இதம் தாண்டி தாலாட்டும்.


மதிய உணவு இடைவேளை நேரத்தை, அரிதாக, தவறவிட்டு தாமதமாக வந்து கை வலிக்க டப்பாவை தட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் வண்டிகாரனும், மதிய இன்டர்வெலிலாவது மிஞ்சியிருக்கும் வெம்பிய மாம்பிஞ்சுகளையும், காய்ந்த சீனிக்கிழங்கையும், பனங்கிழங்கையும் விற்று விட காத்திருக்கும் கிழவியும், எப்போதும் பீடி வாடை அடிக்க சற்று தள்ளி அமர்ந்திருக்கும் லக்கி பிரைஸ்காரனும், பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,.......ஏன்?


இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு.



Friday, November 26, 2010

நன்றி

Thanx for considering and sharing



Wednesday, November 24, 2010

விக்னேஷ்வரியின் பதிவிற்கு எதிர்பதிவு, பின்பதிவு, ஏதோ ஒண்ணு

கணவன்மார்களை நக்கலடிக்கும் விதமாக விக்னேஷ்வரி இட்ட பதிவிற்கு பதில்பதிவு. (எல்லாம் ஒரு ஹ்யூமர் தான்)

//=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்.....//

காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா.....

இது என்னடா புது புரளியா இருக்கு...! கி.மு ல கூட எந்த பொண்டாட்டியும் இப்டி எழுப்புனதா சரித்திரம், தரித்ரம் எதுவும் இல்லையே...?????
(மாசம் முதல் தேதி, உங்க அப்பா அம்மாவ பாக்க போறதுக்கு டிக்கெட் (எங்க கிரெடிட் கார்டுல) போடுற நாள், உங்க தம்பி ஊருக்கு என்னைக்கு போவான்னு கேட்ட மறுநா காலை தவிர‌ )



//=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே...//

கிளிப்பச்சைன்னா, அம்மா கிளி பச்சையா, அப்பா கிளி பச்சையா, குட்டி கிளி பச்சையா..?
சொல்றத கரிகிட்டா சொல்றது இல்ல அப்புறம் பச்சபுள்ளய திட்டிகிட்டு...
(கிளம்புறப்ப எதிர்த்த வீட்டு கிளி "பச்சையா போட்ருந்த டிரஸ்" இந்த கலர் தானே....ஹி...ஹி.. )



//=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது ...//

தினம் நல்லா ..அட்லீஸ்ட்.. வாயில வைக்குற மாதிரி இருந்தா ஏம்மா இப்டி கேக்குறோம்.



=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.

.....எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி.... (இத நல்லா படிங்க)....
இப்ப சொல்லுங்க ஃபோன் வீட்டுலயெ இருக்குறது யார் தப்பு?
ஒரு வேல‌ய பண்ணா ஒழுங்கா பண்ணனும்.  ஆபிஸ்ல தான் உங்க தப்பை அடுத்தவங்க தலைல கட்ரீங்கன்னா, வீட்லையுமா...?



//=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. //

இது நம்மள விட புருஷன் யோக்கியமானவனா இருக்கானேங்குற பொறாமையா....?
இல்ல‌
நம்ம டெக்கினிக்கையேத்தான் இவனும் ஃபாலோ பண்றானோங்ற டவுட்டா..?
(முதல்ல emotional atyachar  பாக்குறத நிறுத்துங்க‌)



//...எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...//

நீங்க கேட்ட De Beers நெக்லஸ், ரிங் வாங்க அந்த சீனு கிட்டத்தான் உங்க அப்பாவுக்கு கால் உடஞ்சிருச்சு, அம்மாவ நாய் கடிச்சிருச்சுன்னு சென்டிமண்ட் கத சொல்லி கடன் கேட்ருப்போம்....


=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...

அப்டி யெல்லாம் டவுட் ஆகாதீங்கமா. ஆஃபிஸ்ல இருக்குற பொண்ணுங்க பிளாக் போடுற வேலைய இல்ல அவங்க பாய்ஃபெரண்டுக்கு போன் போடுற வேலயத்தான் பாக்குறாங்க...... அப்புறம் ஆம்பிளங்க தான எல்லா வேலயையும் பாக்க வேண்டி இருக்கு, ஆபிஸ்லயும்.
(என்னமோ உங்களுக்கு தெரியாத மாதிரி......)


=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!

விடும்மா. செத்துப்போன நாக்கு அப்டித்தான் உப்பா, உரப்பா எதுனா பாத்தா துடிக்கும். என்னது எப்டி செத்து போச்சா...? ஹி...ஹி...என்னமா நீங்க சமச்சதத்தான மதியம் கூட சாப்புடுறோம். (பாம்பேல இருக்குற டப்பாவாலாக்கெல்லாம் டெங்கு ஜொரம் வந்தாலும் லீவு போடமாட்டேன்றானுகளே)



=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...

என்னமா இது புது பழக்கம்?  பெர்மிசனெல்லாம் கேட்டுகிட்டு,
(ஹலோ அப்பலோ, ...ஆமா நானே தான்....ஆமா அதே வார்ட்க்கு தான்....அதே பெட் தானா. தாங்க் யூ)


=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...

அதுனால என்ன. டிபென்டென்ட் கார்ட் தான அது.
இல்லனாலும் ஸ்டேட்மென்ட் வந்தவுடனே கரெக்ட்டா ஞாபகம் வச்சி எங்க செக்புக்ள நீங்களே ஃபில்அப்பும் பண்ணி கையெழுத்து போட சொல்லி நீட்டாமலா விடுறீங்க.
(உங்க கார்டுல இருந்து எங்களுக்கு ஒரு ரேஸர் செட்டாவது வாங்கி கொடுத்திருக்கீங்களா? )



=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..

இது பரவாலம்மா. "ஏங்க, இன்னைக்கு நா அழகா இருக்கேனா?, இன்னைக்கு நா ஸ்லிம்மா ஆயிட்டேனா"னு நீங்க நிதோம் கேக்குறீங்களே. ஒரு நாளைக்கு எத்தன இன்னைக்கு இருக்கு?
( மனசாட்சிய ஆஃப் பண்ணத்தாம்மா பார்டிக்கு போறோம் )



=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...

எங்க அப்பா அம்மா ஊருல இருந்து வர்றப்ப, ரிசீவ் பண்ண ஏர்போர்ட் போறதுக்கு உங்களுக்கு பர்மீஸன் தர முடியாதுனு சொன்னானே ஒரு மானேஜர் அவன மாதிரியே தான்மா எங்க மானேஜரும், ஃபேட் ஃபெள்ளோ.


=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.

வெளிய போறோம்னா நீங்க அதான் சாக்குன்னு அன்னைக்கு கிச்சன் பக்கமே போறது கிடயாது. காபியே ஆன் தி வே பரிஸ்டால தான். இதுல ஆஃப் பண்ணிடுங்களேனு பில்டப்பு. ஆன் பண்ணாத சிலிண்டர எபப்டி ஆஃப் பண்றது....?!!!!!



=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...

நீங்க பாக்குற சீரியல்ல அன்னைக்கு என்ன தீமோ அதே மூட வீட்ள எஸ்டாப்ளிஷ் பண்றீங்களே, அத விடவா? சீரியல்ல எழவு எபிஸோட் வந்தா அன்னைக்கு வீட்ல வெளக்கு கூட ஏத்த மாட்டீங்க. அன்னைக்கு உங்க அத்த மாமாவோட வெட்டிங் டேவா இருந்தாலும் அவங்க கிட்டயே, "என்னத்தே இன்னைக்கு அகத்திகீர சமைக்குறீங்களா",னு கேக்குறீங்களே, உங்கள எந்த காட்டுல போய் விட்றது....


=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

மெனு கார்டை உங்க கிட்ட  கொடுக்குறது, ஆர்டர் பண்றதுக்கில்லமா....

1. ஒவ்வொரு அயிட்டம் பக்கத்துலயும் வெல எவ்வளவுனு போட்டிருப்பாங்க அத நீங்க பாக்கணும்னு தான். அது மட்டுமில்ல‌

2. நீங்க வீட்ல திரும்பித் திரும்பி சமைக்குற அதே இட்லி, தோச, சப்பாத்தி, தயிர் சாதம்; இந்த நால தாண்டி உலகத்துல எவ்ளோOOO அயிட்டம் இருக்குனு நீங்க தெரிஞ்சிக்கணும்னு தான்.


பின்குறிப்பு: இதையெல்லாம் அங்கையே பின்னூட்டமா போட வேண்டியது தானேனு கேக்குறீங்களா என்ன பண்றது இந்த கடையில பதிவு போட நேரமாச்சு, அதான்.
Picture courtesy: http://www.corbisimages.com/Enlargement/NT3776635.html



Sunday, November 21, 2010

மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்



பாடல் : நெஞ்சில் நெஞ்சில்
பாடலாசிரியர்: மதன் கார்கி
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

___________________

ஆண்:
"நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ


மாலை வேளை வேலை காட்டுதோ"

இதுவரை சாதாரண வரிகளே

 "- ‍என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ"

என்ற வரி நன்றாக உள்ளது. அநேகமான அது "மூளை வானம்" (மன வானம் போல? ) என்பதின் எழுத்துப்பிழையால் திரிந்து விட்டது என எண்ணுகிறேன். உறுதியாக  தெரியவில்லை.

அடுத்து வரும்,

"என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்" 

"மின்சாரல்" அட போட வைக்கிறது. மழைச்சாரல் தெரியும், மின்சாரம் தெரியும், அது என்ன மின்சாரல்? குறைந்த அளவு மின்சாரம் உடலெல்லாம் பாய்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். சந்தேகிக்க வேண்டாம், சிலிர்க்கும் போதும் ஒரு வகை மின்சாரல் தான் பாய்கிறது; விஞ்ஞானப்பூர்வமாக.

‍‍‍__________



அடுத்து வரும் மூன்று பத்திகளும் காதலின் தலை நிலை...

ஆண்:
"ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!"

"அசையும் இமையின் இசையில்" இமை அசைகையில், முதலில் ஏது சத்தம்? ஆனால், அங்கே பரவியிருந்த மௌனத்தில் இமை அசையும் சத்தம் கூட கேட்டதாம் (Pin drop silence போலவா?) அதுவும் சத்தமாக கேட்கவில்லை, இசையாக... இனிமையான இசையாக.
ம்...எல்லாம் காதல் படுத்தும் பாடு.

பெண்:
"வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?"

பார்வையை வில், வாள், தூரிகை என solid ஆகத்தான் சொல்லுவார்கள், இங்கே அது "திரவமானதையும்"; astronomy, building, பூ போன்றவையுடன் சித்த‌ரிக்கப்படும் இதயம் இங்கே "புதரானதும்" கவனிக்கப்படவேண்டியவை என்றே எண்ணுகிறேன். படத்தில் இவ்வரிகளை பாடும் கதாபாத்திரம் "complex/complicated or at least tough character"ஆக இருந்தால் மேலும் முக்கியம் பெரும்.  

ஆண்:
"உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)

ஏற்கனவே (இது வரை வந்த பத்திகளில்) "மேலே", "கனா", "நிலா" சென்று உலவுகையில்
"உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த" என்ற வரிகள் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என கொஞ்சம் குழப்புகிறது.
___________________



அடுத்து வரும் மூன்று பத்திகளும் காமத்தின் அமிழ் நிலை

பெண்:
"பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!"

"பசையூறும் இதழும்..." இது பெண் பாடுவது. கேட்பவர் பொருளை சரியாக உணர்தல் முக்கியம். "தன் காமத்தை வெளிப்படுத்த, வர்ணிக்க‌ பெண்ணுக்கு கூடாது கட்டுப்பாது" என எண்ணுவோர் இந்த பத்திக்காக பாடலாசிரியருக்கு பூக்களை அனுப்பலாம். மயிர் என்ற சொல்லாடலை இங்கே சென்ஸார் செய்யவேண்டும் என்ற கருத்து வந்தால் இலக்கியவாதிகள் என்ன சொல்வார்களோ? மொத்தத்தில் இந்த பத்தியில் ப்ளாக்கர்க‌ளுக்கு நல்ல தீனி கிடைக்க ஆரம்ப புள்ளி வைத்துள்ளார் பாடலாசிரியர் :)   

ஆண்:
"ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே"

ஏற்கனவே பெண் தன் இதயத்தை "புதர்" என்று கூறியுள்ளாள், ஆனால் இந்த பத்தியில் ஆண் அதனை "வெள்ளைத் திரை" என்பது பொருத்தமானதாக இல்லை. கதாப்பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமலேயே காதலித்து காமம் கொள்ளும் நிலையில் இப்பாடல் வந்தால் மட்டும், இது முரணாகாது.

"விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே"
இப்பாடலில், பலரையும் ரசிக்கவைக்கும் மேலும் இரு வரிகள்.


பெண்:
"விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)"

இது வரை சிறப்பான வரிகளுடன் "அட, ஆஹா, ம். நடக்கட்டும் நடக்கட்டும்", என நம்மை ரசிக்க வைத்து வந்த பாடலாசிரியர் திடீரென "ஏதோ ஒண்ணு, முடிச்சிவிட்ருவோம். இவங்க எப்பவுமே இப்படித்தான நெனப்பாங்க‌" என எண்ணி எழுதியது போல் உள்ளது இந்த கடைசி பத்தி. Just filler lines.

மொத்தத்தில் பாடல் நன்றாகவே உள்ளது, கேட்கவும் ரசிக்கவும். ஆனால் சிறந்த பாடல்களுள் ஒன்று என சொல்லுவதர்க்கில்லை, அதற்கான அம்சங்கள் சில இருப்பினும்.

Sorry கார்கி.
With no offence...

Disclaimer: இது பாடல் விமர்சனம் அல்ல. இந்த பாடல் பற்றிய என் எண்ணங்கள்.


ஒரு பாளோ அப் :

அது மூலை வானம் தான். எந்த பிழையும் இல்லை.
மூலை வானம் என்றால், .... ஆங்கிலத்தில் Horizon *
Horizon க்கு தமிழில்
கீழ்வானம், தொடுவானம் என்ற பதங்கள் இருப்பது, சாதாரணமாக அறிந்ததே.

மாலை வேளையில் கீழ்வானம் செக்கர் வானமாத்தான் இருக்கும். அப்படி சிவப்பாக இருக்கும் கீழ்வானம், தன் நெஞ்சில் வந்த காதல் தீயினால் தானோ  என கேட்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Horizon  பற்றி  Dr. Hugo Heyrman யின் The art of the horizon கவிதை:

I saw the horizon,
the horizon is factor x,
the horizon is what everything encloses,
the horizon divides earth, sea and sky,
the world is unthinkable without the horizon,
the horizon is a boundary where man cannot come,
the horizon exists between the visible and the invisible,
the horizon is not inside or outside the world,
the horizon of art is factor x.

In reality there is no horizon,
I cannot get near the horizon,
I try to push the horizon further away,
all and everything appears within the horizon,
behind every horizon there is another one,
everybody has his own horizon. 

The horizons are within us,
Infinity overflows all horizons.


Courtesy for The art of the horizon: http://www.doctorhugo.org/e-poetry/horizon.html
* http://twitter.com/madhankarky in reply to sridharang

Picture(s) courtesy: http://www.moviegalleri.in/2010/11/engeyum-kadhal-movie-stills-engeyum.html
Lyrics and picture courtesy: http://madhankarky.blogspot.com/2010/11/lyric.html                                                                                                                                           
                                                                                                                                                                  

Thursday, November 18, 2010

ஒரு கொலையை பார்த்த மதியம்…

மதியங்கள், ஊருக்குள் பெரும்பாலும் வெறுமையானவை, சுவாரசியமற்றவை. (கள்ளக்காதலர்கள் மன்னிக்க…)

ஊரை பற்றிய‌ நினைவுகள் தாயை பற்றிய நினைவுகள் போல. ஊரை பற்றிய பேச்சுக்களும், அவ்வாறே. “போ, போ நீ ஒரு பிள்ள பொறக்கவேயில்லன்னு நினச்சிக்கிறேன்”என்று தாயும் “போ, போ ஊருக்குள்ள நீ ஒருத்தி தான் சுமந்தியா” என்று பிள்ளையும் சண்டையிட்டுக்கொள்ளாத வீடு உலகத்தில் இல்லை. சண்டையிட்டு கொள்வதும் விட்டுக்கொடுப்பதும் சமாதானமாகி சேர்வதும்தான் வாழ்க்கை என்பதை தாய்‍‍பிள்ளை உறவில் தெரிந்துகொள்ளாதவர்கள் அதிகப்படியாக சண்டையிட்டு, வீடு துறந்து சமுதாயகுப்பைகளாகிறாகள்.

ஒரு விடுமுறை நாளின் பின் மதியத்தில், ஊரை கிழித்துச்செல்லும் ஓடையை இல்லை சாக்கடையை சிறு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த வயதில் கூட்டம் எதற்காக இருந்தாலும் அதில் முன்னே நிற்பது வீரத்தின் வெளிப்பாடு. சாக்கடை ஓடைக்கு பல அடிகள் முன்னே கூட்டம் நின்றது. ஆர்வத்தில் முன்னே மேலும் ஒரு அடி வைத்தபோது ஒரு கை தலைமுடியை பற்றி பின் இழுத்து கூட்டத்தோடு நிறுத்தியது.

கூட்டத்தின் முன் நின்று பார்த்த போது….

ஓடையில் ஒருவன் கிடந்தான். என் போன்ற சிறுவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவன்; உடலில் பல வெட்டுக்களோடு. சினிமா தந்த சிற்றறிவினால், அவனை யாரோ சிலர் விரட்டி வந்து வெட்டியிருக்கின்றனர் என்று யூகிக்க முடிந்தது. உயிர்வெறி அன்றி அந்த சாக்கடை ஓடையில், இறங்கத்துணியும் காரணம் யூகிக்க முடியவில்லை.

சாக்கடையில் இருந்த ஓர் திட்டிற்கு தவள முயன்றான். தோற்றான். இரண்டு கால்களின் பின்தொடைகளும் கிழிந்து, இடது கை மணிகட்டு தோலினால் மட்டும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்க, தலையிலிருந்து வழியும் ரத்தம் உறையாமல் கழுவிச்சென்ற ஓடை நீரை செம்மையாக்கிக்கொண்டிருந்தது.



பின்னால், மெதுவாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது; பரிச்சயமில்லா ஒர் அமைதியுடன். தலையில் தட்டி அவ்வப்போது “போ” என்று செய்கை செய்தனர் சிலர், வார்த்தை விடுத்து . சிறுவர்கள் இது போன்ற கோரங்களை பார்க்கவேண்டாம் என்று அக்கறை கொண்டனரோ அல்லது இவ்விடத்தில் இவர் தம் பகுத்தறிவு துளிர் விடவேண்டா என எண்ணினரோ.

சாக்கடையில் கிடந்தவன் அவ்வப்போது, ஹக்….ஹக்… என்ற சத்தத்துடன் சீரான இடைவெளியில் துடித்துக்கொண்டிருந்தான். பல ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த சுப்ரமணியபுரம் என்ற படத்தில், சீட்டு கிளப்பில் கொலைசெய்யப்படும் ஒருவன் துடித்து அடங்குவதை சில வினாடிகள் திரையில் பார்த்து, வன்முறை அதிகமாக இருக்கு என்று உச்சு கொட்டியிருப்பீர்கள். வினாடிகள் அல்ல, நிமிடங்கள் அல்ல, மணி நேரங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், அன்று ஊரே கூடி.

கட்டுப்படுத்த யாரும் இல்லை, ஆனால் சேரும் எல்லோருமே சேர்த்தனர், காத்தனர் அந்த அமைதியை. கையாலாகாத்தனம் வாரி, வளைத்து, நெருக்கி, இறுக்கும் போது அழுத்தமான அமைதி சுயதிணிப்பாகிறது.

கால் மணி, அரை மணி என்ற துண்டுகள் மறைந்து முழு மணி நேரங்கள் கடந்தன.
“வாங்கய்யா, ஆஸ்பித்திரிக்கு தூக்கிட்டு போவோம்…”, என்ற வாசகம் இறுதி வரை ஏக்கமாக முடிந்தது, என‌க்கும். படங்களில் பார்த்தது போல் பொலிஸ் வரும் என்ற எதிர்பார்ப்பு எப்போது மறைந்ததோ. வேடிக்கை எண்ணமும் கறைந்து போய், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களாய், பசியோடு உடல் சோர்வும் சேர, கூடிய கூட்டத்தின் கால் வழி உள்புகுந்து, வெளிவந்தபோது சூரியன் மறைந்திருந்தது.

சாக்கடை கரையை தொட்டடுத்த அந்த‌ வீட்டின் திண்ணையில் வாழ்ந்து வந்தாள் ஒர் குரூபக் கிழவி. தன் பிள்ளைகளின் தயையை எதிர் நோக்கி வாழும், அவர்தம் செயல்களின் மேல் ஆளுமையற்ற அந்தக் கிழவி தான் வாழும் திண்ணையில் அமர்ந்தபடி கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்குத்தானே ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள் என்று தோணியது.

பின்விளைவுகளை பற்றி எண்ணாது, அடுத்தவரின் அவசரத்திற்கும், ஆபத்திற்கும் வரிந்துகட்டி கொண்டு கிளம்பும் பிள்ளைகளை தட்டி கொடுக்கும் தாய் இருக்கும் வரை எந்த பிள்ளையும் தைரியசாலி தான். “உனக்கேன்…”, என்ற அவளின் ஒற்றை சொல்லோடுதான் ஒவ்வொறு தெருவும் ஒவ்வொறு ஊரும் மனிதம் இழக்கிறது; மயானம் நகரினுள் விஸ்தரிக்கிறது.

சொந்த ஊரின் பெருமைகள் தாயின் பெருமைகள் போல். என்ன சொல்ல…..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...