Sunday, December 12, 2010

காலையில், காணாமல் போன….

எங்கே சென்றன‌ என்று தெரியவில்லை.
பல ஆண்டுகளாய் இருந்தது.
தினமும் இங்கேதான் கண்டோம், அனுபவித்தோம்.
ஆனால், இப்போது காணேம்.
இப்படியும் நடக்கக்கூடுமா என நான் மட்டும் அல்ல
என்னோடு நண்பர்களும் வியக்கின்றனர்.
எங்கள் ஊரைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்காக அருகில் இருக்கும் பெரு நகரத்தின் பெயர்
சொல்லிச்செல்லும் பழக்கமும் எங்களுக்கு இல்லை.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நெசவுத்தொழிலை
நம்பியிருந்த‌ ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் தான், எங்கள் ஊர்.
ஊரின் எல்லா தெருக்களும் அதிகாலையிலிருந்தே
மெல்ல மெல்ல சோம்பல் விடுத்து துயில் கலையும்.
பெண்களும் அதிகாலையிலேயே வாசலை
சுத்தம் செய்தால் தான் உண்டு. தாமதமானால்,
துணிகளை நெய்யும் முன், நூலில் பாவு போடுவதற்காக
தெருக்களின் இரு ஓரங்களிலும் ஆதியும் இன்றி அந்தமும் இன்றி
கட்டி விடுவார்கள்.
பெண்கள் வாசல் கூட்டி/பெருக்கி , தெளித்து, கோலமிட்டு முடிக்கும் வரை
திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டிருக்கும் சிறார்களின்
தலையாயிய கடமை, கையில் கொட்டப்பட்ட
கோபால் பல் பொடியோ அல்லது 1431 பயோரியா பொடியையோ
சுவைத்துக்கொண்டிருப்பது தான். பல் தேய்க்கும் கடமையை
முன்னமே செய்தவர்கள் வீட்டின்முன் ஓடும் சாக்கடையில்
காலைக்கடன்களை தீர்த்துக்கொண்டிருப்பார்கள்.
பெண்கள் தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டே
இன்றைய கிழமை, நடுச்சாம கோடாங்கியின் வாக்கு,
சாணி தெளிப்பது, எத்தனை புள்ளி கோலமிடுவது
என பேசிக்கொண்டிருக்க; சிறார்களும் நேற்றிரவு
தூங்கும்முன் கேட்ட கதை, தூங்கும் பொழுது ஒண்ணுக்கு விட்டது,
எங்கிருந்தோ வந்த உடுக்கை சத்தம் என பேச்சு நீளும்.
சாக்கடையின் உள்ளேயே வந்து தாக்கும் பன்றிகளிடம் இருந்து
காலைக்கடன்களை பட்டுவாடா செய்துகொண்டிருப்பவர்களை காக்க
அவ்வப்போது கடன் தீர்த்த ஒரு ஆள் காவலுக்கு நிற்பதும் உண்டு.
அனேகமாக இந்த பட்டுவாடாக்கள், பெண்கள் தங்கள்
வாயிற்கடமையை முடித்து, “என்னடா முடிஞ்சிச்சா?” அல்லது
“இருந்தது போதும் வா” என அதட்டும் வரை தொடரும்.
இந்நேரத்தில், அடுத்த தெருவில் உழுந்தங்களி
விற்பனைக்கு தயாராகிக்கொண்டிருக்கும். ஒரு கிழவியும்
அவளின் விதவையான மகளோ/மருமகளோவின் ஜீவனத்திற்கு,
அவர்கள் வீட்டு திண்ணையில் செய்து கொண்டிருந்த
அந்த வியாபாரத்தை தான் நம்பியிருந்தனர்.
களி தயாராகிக்கொண்டிருக்கும் அடுப்பை
தண்ணீர் தெளித்து அணைத்து,
ஈர விரல்களினால் அந்த சாம்பலை தொட்டு,
களிச்சட்டியில் திருநாம பட்டையிட்டு,
வணங்கி, தினமும் விற்பனையை தொடங்குவாள் கிழவி.
கிழவிக்கு ஏதோ நம்பிக்கை. எங்களுக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது.
அது, வாங்கும் காசுக்கு அவளின் மகளையோ/மருமகளையோ விட
கிழவி எப்போதும் சிறிய உருண்டைகளே தருவாள் என்பது.
ஒரு கையில் நழுவும் டவுசரை இழுத்துக்கொண்டோ,
அல்லது ஒழுகும் மூக்கை துடைத்துக்கொண்டு
மறு கையில் வாழை இலையில் மடித்து தரப்பட்ட
சூடான உருண்டைகளை பத்திரமாக வீடு வந்து சேர்க்க வேண்டும்.
சில சமயங்களில், கல் இடறியதாலோ, கை தவறியோ உழுந்தங்களி
உருண்டைகள் மண் தெருவில் விழுந்துவிடும். அந்த இழப்புகளின்
வேதனையை இன்று வரை வேறு எதுவும் மிஞ்சியதில்லை.

அநேகமாக, விடிந்திருக்கும். இப்போது பாவு போட
ஆரம்பித்திருப்பார்கள். பாவு போட ஆரம்பித்திருந்தால் இனி அதை
அவிழ்க்கும் வரை வீட்டின் உள்ளே, வெளியே சென்று வர
பாதியாக மடங்கித்தான் செல்லவேண்டும்.
இதற்குள் பால்காரனும் வந்து சென்றிருப்பான். அவன்
வந்து சென்ற செய்தியை வாசற்படியில் சொட்டியுள்ள
பால் துளிகள் தெரிவிக்கும். திண்ணையில் அமர்ந்து,
வாங்கி வந்த உருண்டைகளை தின்று கொண்டிருந்தால்
ஒரு சிறிய சொம்பில் கருப்பட்டி காபி வரும். பால்,
பச்சிளம் குழந்தைக்கும், நோயுற்றோருக்கும் மட்டுமே கிட்டும்.
சில நாட்களில், அதுவும் கோடை காலங்களில்
தெருவில் அந்நேரத்தில் பதனீர் வரும்.
உருண்டையோ, காபியோ இல்லாத காலையை பதனீர் ஈடுகட்டும்.
காலைகடனுக்குச் சென்ற ஆண்கள், தோளிலே அன்ட்ராயருடன்
வந்து கொண்டிருப்பார்கள். சிலிர் அதை (பட்டாபட்டி என்றால்
இன்று அனைவருக்கும் தெரியும்) சைக்கிள்
ஹாண்டில் பாரில் போட்டு,
சைக்கிளை தள்ளிக் கொண்டுவருவர்.
குளத்திற்கோ, பம்ப் செட்டிற்கோ குளிக்க சென்ற ஆண்கள்
இடுப்பிலே ஈர வேட்டியும், தோளிலே ஈரத்துண்டும்,
நெற்றியிலே பிள்ளையார் கோயில் விபூதியுமாய்
திரும்பிக்கொண்டிருப்பர்.
டீ கடைக்கு செல்லும் ஜோடியும் அங்கிருந்து வரும் ஜோடியும்
(ஜோடி என்றால் இருவர். இன்று இதன்
அர்த்தம் mixed doubles ஆகி விட்டது),
நடுத்தெருவில் நின்று சிறிது நேரம்
செய்தி ப‌ரிவர்த்தனை செய்து கொள்ளும்.
பாவு போடாத நாட்களில், வீதி வழியே போகும் மாடுகளோ,
பருத்திமார் விற்க வரும் வண்டி மாடுகளோ இடும் சாணி
உடனே அப்புறப்படுத்தப்படும். தெருவில் யார் வீட்டு வாயிலின்
அருகே சாணம் உள்ளதோ அது அவர்களுக்கே சொந்தம்
எனும் புரிதல் ஒப்பந்தமும் சமயத்தில் மீறப்பட்டு அதனால்
ஏற்படும் பெண்களின் வாக்குவாதங்கள்,
டீ கடை செல்லும் ஆண்களால் சமாதானப்படுத்தப்படும்.
இப்போது, இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகளில்
இருந்து நெசவுத்தறி ஓசை தெருவில் கேட்க ஆரம்பிக்கும்.
அடுத்து, வீதியில் மோர்காரி வரும் வரை சிறிது நேரம் கிட்டும்.
அது வரை கோலிகுண்டோ, பம்பரமோ,
கிட்டிப்புள்ளோ, டயரோ ஆடலாம்.
ஆனால், மோர்காரி விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
ஏதோ அவசரம் போல் கூவிக்கொண்டே ஓடுவாள்.
5 காசுக்கு ஒரு சொம்பு மோர் கிடைக்கும். அதனுடன் சேர்க்கும்,
5 பைசாவிற்கு கிட்டும் ஒரு கரண்டி தயிர் காலையில்
எனாமல் தட்டிலும், மதியம் ஈயத்தூக்கிலும் உள்ள
பழைய சோற்றிற்க்கும் இனிய மனம் சேர்க்கும்.
அடுப்படியில், பாத்திரம் தேய்க்கும் மூலையில்
ஜல்ஜாரி அருகே ஒரு சிமெண்ட் தொட்டியில்
(உண்மையில், சிமெண்ட்டால் செய்த அண்டா அது) இருக்கும்
நீரைக்கொண்டு, அங்கேயே நின்று கொண்டு
சீயக்காய் பொடி / லைப்பாய் சோப்
மணக்க குளிக்கலாம்.
துவட்டிவிட்டு வந்து கொடியில் தொங்கும் பள்ளி சீருடையான
வெள்ள சட்டை, காக்கி டவுசர் மாட்டுமுன், சட்டைக்கு ஊக்கும்,
டவுசரின் பட்டைகள் அறுந்து விடும் நிலையிலும் உள்ளனவா என உறுதி படுத்திக்கொள்ளுதல் முக்கியம்.
அந்த டவுசர் எங்கள் இடுப்பில் நிற்காது, அந்த பட்டைகளினால்,
எங்கள் தோள்களிலிருந்து தான் தொங்கி மானம் காக்கும்.
பக்கத்து வீட்டு திண்ணையில் இயங்கும்
பெட்டிகடையில் வாங்கிய “மட்ட ஊறுகா”யினால்
காலையில் கிட்டும் பழைய சாதம் சுவைக்கிற‌தா அல்லது
இதனால் அது சுவைக்கிறதா என்ற வியப்பு தினமும் நிகழும்.
ஹார்லிக்ஸ் பாட்டிலில் உள்ள தேங்காயெண்ணயய்
சாதுர்யமாக கையில் ஊற்றி தலையில் தடவி,
எண்ணெய் தோய்ந்த ஆனால் அழுக்கே இல்லாத சீப்பால் சீவி,
பான்ட்ஸ் பொளடரை முகத்தில் அப்பி, சாமி மூலையில் நின்றால்,
நெற்றியில் திருநீர் மற்றும் சாந்து பொட்டு இட்டு, கையில் அவ்வப்போது
ஏதாவது காசு தருவார்கள்; 2 பைசா, 3 பைசா அதிகபட்சமாக 5 பைசா என்று.
பள்ளிப்பையை, பெரும்பாலும் அது VSS ஜவுளி ஸ்டோர்
என சிவப்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் பை;
எடுத்துக்கொண்டு வீதியில் நடந்தால்,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் ரேடியோ ஒலித்தாலும்
பள்ளி வரை பாடல்கள் இடைவிடாது தொடரும்.
பயணம் தொடரத்தொடர விரியும் நட்பு வட்டம்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பிரத்யோகமாக
தெருவிற்கு வரும் அந்த தறியின் ஒலி
வழி எடுத்துரைக்கும் “நல்லா படிக்கணும்” என்று.
பூக்கடை பஜாரை தாண்டும் போது அதன் பிரத்யோக
ரோஜா, சந்தன‌ம் மற்றும் ஜவ்வாது வாடைகளின் கலவை;
சிமெண்ட் தெருவில் நடக்கையில் வரிசையாக
டீ கடைகளில் இருந்து வரும் டீ மற்றும் வடை வாசனை,
நடைபயணத்தை மேலும் ரசிக்க வைக்கும்.
தெருவோர ஆக்கிரமிப்பில் முளைத்த மன்றங்களின்
உள்ளிருந்து கூட்டத்தோடு தெருவிற்கு வரும் அரசியல்.
பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர் துணையின்றி
தானே விரும்பி வரும் பிள்ளைகளை உள்வாங்கி
“அறி”வணைக்கும் அந்த கற்கோவில்.

வீட்டில் கிடத்த காசுக்கு காலை இன்டர்வெல்லில்
மனம் உலகையே விலை பேசத்துடிக்கும்.
இன்று ஒருவன் கலெக்டராய், சிலர் விஞ்ஞானியாய்,
சிலர் ஆராய்ச்சியாளனாய், சிலர் வியாபாரியாய்,
பலர் மருத்துவராய், பொறியியல் வல்லுனராய்
அதே ஊரின், அதே காலைகளில், அதே தெருக்களில்,
ஒவ்வொரு முறை ஊர் போகும் போதும் தேடுகிறோம்.
உன்னால், உங்களால் எங்கள் காலைகள்,
எங்கள் வாழ்க்கைகள் சிறப்புற்றன
என நன்றி சொல்ல…….
காணவில்லை……
உங்கள் ஊரிலேனும் பத்திரமாக உள்ளதா…?

(மீள்பதிவு) Picture courtesy:
weavers pic: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn78A3D2V2JvAU5Mnzv8kCJ-OfpQH4X0S7JBeY0TH5iJW91JmSAue5vP-SUG0PXdCC30BVl1SBus_5CrY07h6J01KjS-5hIlrOlHeVizL0gAFJyRsYcKxjuyF1G1lulTKih9cg649iqJIF/s400/IMG_7422.jpg
school and children: http://cloud.globalgiving.org/pfil/5047/ph_grid7_5047_17376.jpg




9 comments:

Unknown said...

அருமையான அனுபவங்கள்! சூப்பர்! வாசிக்கும்போது காட்சிகளாய் விரிகின்றன!வாழ்த்துக்கள்! :-)

ஆமினா said...

இந்த போட்டோக்களும் உங்கள் வர்ணனை கலந்த பதிவும் எங்கள் ஊரை ஞாபகப்படுத்தியது. எங்கள் ஊரும் நெசவு தொழிலை முக்கிய தொழிலாக கொண்ட ஊர் தான். அந்த பள்ளிக்கூடம் எங்கள் பள்ளிகூடம் போலவே உள்ளது :)

அன்பரசன் said...

//பால்,
பச்சிளம் குழந்தைக்கும், நோயுற்றோருக்கும் மட்டுமே கிட்டும்.//

அருமைங்க.

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

சென்னை பித்தன் said...

வார்த்தைகள் காட்சிகளை உயிரோடு கண்முன் கொண்டு வருகின்றன.மிக நன்று.

dearbalaji said...

Arumai Chance illa

Chitra said...

You have a nice blog. (Following)

Best wishes!

G.M Balasubramaniam said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...மாற்றங்கள் நன்றாக உள்ளதா.?அநுபவித்து எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

குந்தவை said...

உங்கள் பதிவில் மிகவும் பிடித்த/வியந்த பதிவு இது. ரெம்பவே அனுபவித்து மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். முன்னமே கமெண்ட் எழுதியிருப்பதால் நான் திரும்பவும் எழுதவில்லை... ஆனால் ஒவ்வொரு தடவை வரும்போதும் இதை தவறாமல் வாசித்து விடுவேன்.

எங்கள் கிராமத்தில், இப்படி காலைநேரம் இல்லை.. அது குளங்களும் வயலும் சூழ்ந்த விவசாயக் கிராமம் . வறுமையும் செழுமையும் பசுமையின் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கும். உங்க அளவுக்கு எனக்கு அழகாக விவரிக்க முடியாவிட்டாலும்.. எங்க கிராமம் எனக்கு நினைவு வருவது உண்மை.

more option வைத்தால் பதில் எழுதுவதற்க்கு எல்லோருக்கும் வசதியாக இருக்கும்..

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...